சென்னையில் மழையின்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகள் என்னென்ன..?


சென்னையில் மழையின்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகள் என்னென்ன..?
x
தினத்தந்தி 16 Oct 2024 8:59 AM GMT (Updated: 16 Oct 2024 9:33 AM GMT)

சென்னையில் 412 இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன் தினம் முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் நேற்று சென்னையின் பல பகுதிகளில் மழை வெள்ளக் காடாக காட்சியளித்தது. மழைநீர் வடிகால்கள் சில இடங்களில் கை கொடுத்தாலும், சில இடங்களில் நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நின்றது.

இந்நிலையில் சென்னையில் கனமழையின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

* சென்னையில் 13.1 செ.மீ மழை பெய்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை.

* சென்னை மாநகராட்சியின் 21 ஆயிரம் தகளப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொண்டனர்.

* சென்னையில் மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட 3 சுரங்கப்பாதைகளும் மீண்டும் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

* சாலைகளில் விழுந்த 67 மரங்கள் அகற்றப்பட்டு, அங்கு போக்குவரத்து சீர்செய்யப்பட்டன.

* சென்னையில் நேற்று (அக். 15) 131 மி.மீ அளவில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பொழிந்தும் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டன

* பருவமழையினை எதிர்கொள்ள 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது

* பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

* மழைநீர் தேங்கிய 542 இடங்களில் 412 இடங்களில் உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டு, மீதமுள்ள இடங்களிலும் மழைநீர் அகற்றும் பணி துரிதமாக நடைபெறுகிறது.

* நேற்று 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

* பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி அனைத்துப் பகுதிகளுக்கும் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று காலை உணவு ஆயிரம் நபர்களுக்கும், மதிய உணவு 45 ஆயிரத்து 250 நபர்களுக்கும், இரவு உணவு 2,71,685 நபர்களுக்கும், இன்று காலை உணவு 4,16,000 நபர்களுக்கும் என மொத்தம் 7,18,885 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story