செருப்பு தைக்கும் தொழிலாளி கடைக்கு சென்ற ராகுல்காந்தி


செருப்பு தைக்கும் தொழிலாளி கடைக்கு சென்ற ராகுல்காந்தி
x

ராகுல்காந்தி என் கடைக்கு வந்தது ஆச்சரியமாக இருந்தது என்று செருப்பு தைக்கும் தொழிலாளி சேட் கூறினார்.

சுல்தான்பூர்,

கர்நாடக தேர்தலையொட்டி பெங்களூருவில் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அமித்ஷா பற்றி அவதூறாக பேசியதாக, உத்தரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, நேற்று உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூருக்கு வந்தார். அங்குள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.

பின்னர் அங்கிருந்து லக்னோ திரும்பும் வழியில் விதாயக் நகரில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்கு ராகுல்காந்தி திடீரென சென்றார். அந்த தொழிலாளி ராகுல் காந்தியை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தார். அப்போது ராகுல்காந்தி, செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கை, குடும்பம் மற்றும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

"ராகுல்காந்தியை டி.வி.யில் பார்த்திருக்கிறேன். அவர் என் கடைக்கு வந்தது ஆச்சரியமாக இருந்தது. சுமார் அரை மணி நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் வாங்கி கொடுத்த குளிர்பானத்தை குடித்தார். எனது தொழிலுக்கு உதவி செய்வதாக கூறி உள்ளார்" என்று செருப்பு தைக்கும் தொழிலாளி சேட் மகிழ்ச்சியுடன் கூறினார்.


Next Story