சென்னைக்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் மிக்ஜம் புயல்..!!


சென்னைக்கு வடக்கே 130 கி.மீ தொலைவில் மிக்ஜம் புயல்..!!
x

ஆந்திராவின் பாபட்லா அருகே நாளை காலை 5 மணி அளவில் மிக்ஜம் புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம்புயல் நேற்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே சுமார் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது இன்று (டிச.5) ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்து இருக்கிறது. இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண முடிந்தது. இடைவிடாது பெய்த மழையால் சென்னையே தத்தளித்தது. சென்னை நகர் முழுக்க வெள்ளம் சூழ்ந்தது. மழை விடாத சூழலில், மேலும் மேலும் தண்ணீரின் மட்டம் உயர்ந்து வந்ததால் சென்னை மக்கள் அச்சமடைந்தனர்.

இந்த சூழலில் மிக்ஜம் தீவிர புயல் சென்னையில் இருந்து மெது மெதுவாக நகர தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து 130 கி.மீ. வடக்கு திசையில் விலகி மிக்ஜம் புயல் சென்றுள்ளது என்றும் ஆந்திராவின் பாபட்லா அருகே நாளை காலை 5 மணி அளவில் மிக்ஜம் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் காற்று, மழை குறைந்ததால் மின்சார விநியோயம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தொடங்கி உள்ளது. காலைக்குள் அனைத்து இடங்களிலும் மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story