ஆட்டோவில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
![ஆட்டோவில் சாராயம் கடத்திய 2 பேர் கைது ஆட்டோவில் சாராயம் கடத்திய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/27/1588932-img-20231027-wa0052.webp)
புதுச்சேரியில் இருந்து பிச்சாவரத்துக்கு ஆட்டோவில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் துறைமுக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையில், போலீசார் நேற்று காலை கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூரில் இருந்து முதுநகர் பகுதி நோக்கி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அந்த ஆட்டோவை தீவிர சோதனை செய்தபோது ஆட்டோவில் நூதன முறையில் ஓர் அறையை ஏற்படுத்தி, அதில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் வந்தவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் கடலூர் புதுவண்டி பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாவாடை ராயன்(வயது 36) ஆட்டோ டிரைவர் என்பதும், அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சரத்குமார்(31) என்பதும் தெரிய வந்தது. சாராயத்தை கடலூர் முதுநகர் அருகே உள்ள திருச்சோபுரம் வழியாக பிச்சாவரம் பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள 30 லிட்டர் சாராயம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.