மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தற்கொலை: அதிர்ச்சியில் பாட்டியும் சாவு


மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் வாலிபர் தற்கொலை: அதிர்ச்சியில் பாட்டியும் சாவு
x

பேரன் இறந்த அதிர்ச்சியில் பாட்டியும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அயனாவரம் காலனியை சேர்ந்தவர் நாசர்அலி. இவரது மகன் ஷாஜகான் (வயது 22). கூலி தொழிலாளி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகானுக்கும், தஞ்சையை சேர்ந்த பாத்திமா (22) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கர்ப்பிணியாக இருந்த பாத்திமா கணவரிடம் கோபித்துக்கொண்டு தஞ்சையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஷாஜகான் பலமுறை சென்று தனது மனைவியை அழைத்தும், அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த தகவலை கூட தங்களுக்கு சொல்லாததால் ஷாஜகான் மன விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஷாஜகான் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது ஷாஜகானின் பாட்டியான அமீனா (75) பேரன் இறந்த அதிர்ச்சியில் கதறி அழுதபோது மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவர் அருகே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பேரன் இறந்த அதிர்ச்சியில் பாட்டியும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story