பராமரிப்பு பணிகள்: சென்னையில் 55 மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து


பராமரிப்பு பணிகள்: சென்னையில் 55 மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து
x
தினத்தந்தி 27 July 2024 12:37 AM GMT (Updated: 27 July 2024 2:56 AM GMT)

மாற்றாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

சென்னை,

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் நேற்று வரை ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்படுகிறது. அதாவது, 55 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அதற்கு மாற்றாக ஏற்கனவே அறிவித்திருந்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்புகள் ரெயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்துக்கு இரவு 11.59 மணிக்கும், மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12 45 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது.

இதேபோல, கூடுவாஞ்சோியிலிருந்து செங்கல்பட்டுக்கு இரவு 11.55 மணிக்கும், மறுமார்க்கமாக, செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சோிக்கு இரவு 11 மணிக்கும் கடைசி சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. மேலும் 29-ம் தேதி முதல் ஆகஸ்டு 2-ம் தேதி வரை பகல் நேர மின்சார ரெயில் சேவை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மின்சார ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போலவே பகல் மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படும்.


Next Story