ஈரோட்டில் பயங்கரம்தொழிலாளி முகத்தில் திராவகத்தை வீசி கட்டையால் அடித்துக்கொன்ற மனைவிகள்ளக்காதலை கைவிடாததால் வெறிச்செயல்


ஈரோட்டில் பயங்கரம்தொழிலாளி முகத்தில் திராவகத்தை வீசி கட்டையால் அடித்துக்கொன்ற மனைவிகள்ளக்காதலை கைவிடாததால் வெறிச்செயல்
x
தினத்தந்தி 31 May 2023 8:31 PM GMT (Updated: 1 Jun 2023 7:19 AM GMT)

ஈரோட்டில் தொழிலாளி ஒருவரை முகத்தில் திராவகத்தை வீசி கட்டையால் அடித்து மனைவியே கொன்றாா்.

ஈரோடு

கள்ளக்காதலை கைவிடாததால் தொழிலாளியின் முகத்தில் திராவகத்தை வீசி கட்டையால் அடித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு

ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). தறிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி பத்மா (50). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன் சுரேஷ் திருச்சியில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் ஈரோட்டில் உள்ள வீட்டில் சுப்பிரமணியும், பத்மாவும் வசித்து வந்தனர். இந்த நிலையில் சுப்பிரமணிக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவரம் பத்மாவுக்கு தெரியவந்தது. இதனால் அவர் சுப்பிரமணியிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்து உள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

திராவகம் வீச்சு

இதனிடையே நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியும், பத்மாவும் வீட்டில் இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கள்ளக்காதலை கைவிடும்படி பத்மா மீண்டும் கூறிஉள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த சுப்பிரமணி, 'நீ உயிரோடு இருப்பதால்தான் எனக்கு இடையூறாக இருக்கிறது. நீயாகவே விஷத்தை குடித்து இறந்து விடுகிறாயா? அல்லது நான் கொலை செய்து விடவா'? என்று மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பத்மா, வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த திராவகத்தை எடுத்து சுப்பிரமணியின் முகத்தில் வீசினார்.

இதில் சுப்பிரமணியின் முகம் வெந்து வலி தாங்க முடியாமல் அலறினார். ஆனாலும் ஆத்திரம் தீராததால், அவர் வீட்டில் இருந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து சுப்பிரமணியின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவரை கொலை செய்த பத்மாவை நேற்று கைது செய்தனர்.

ஈரோட்டில் கள்ளத்தொடர்பை கைவிடாத கணவரின் முகத்தில் திராவகத்தை வீசி மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story