ஐ.பி.எல். இறுதிப்போட்டி: கம்மின்ஸ் எடுத்த அந்த முடிவுதான் எங்களது வெற்றிக்கு காரணம் - ஸ்ரேயாஸ்


ஐ.பி.எல். இறுதிப்போட்டி:  கம்மின்ஸ் எடுத்த அந்த முடிவுதான் எங்களது வெற்றிக்கு காரணம் - ஸ்ரேயாஸ்
x

17-வது ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 24 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரசல் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் ராணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா 10.3 ஓவர்களிலேயே இலக்கை கடந்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு போட்டியிலும் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கினர். இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு நீண்ட தூரம் காத்திருக்க வேண்டி இருந்தது.

இந்த தொடர் முழுவதுமே நாங்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். அதன் பலனாக இன்று கோப்பையை கையில் ஏந்தியுள்ளேன். சன்ரைசர்ஸ் அணியும் இந்த தொடர் முழுவதுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்கள். இன்றைய போட்டியில் டாஸ் வென்றதும் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் முதலில் பந்து வீசியதால் மிகச்சிறப்பாக அவர்களை தடுத்து நிறுத்தி விட்டோம் என்பதனால் இலக்கை எளிதாக எட்டிப்பிடிக்க முடிந்தது" என்று கூறினார்.


Next Story