மண்டல பள்ளி ஆக்கி: சென்னை அணி 'சாம்பியன்'


மண்டல பள்ளி ஆக்கி: சென்னை அணி சாம்பியன்
x

மண்டல ஆக்கி லீக் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது.

சென்னை,

தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் பள்ளி அணிகளுக்கான மண்டல ஆக்கி லீக் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை செயின்ட் பால்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. செயின்ட் பால்ஸ் அணியில் லட்சுமண ஸ்ரீ (42-வது நிமிடம்), விஷால் (44-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ராணிப்பேட்டை தேவராஜ் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 3-1 என்ற கோல் கணக்கில் செங்கல்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியை வீழ்த்தியது. பரிசளிப்பு விழாவில் ஆக்கி இந்தியா அமைப்பின் பொருளாளர் சேகர் மனோகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.

தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், ஐ.ஓ.பி. துணை பொதுமேலாளர் எஸ்.திருமுருகன், சுங்க இலாகா உதவி கமிஷனர் டி.ஜோஷ்வா, சென்னை மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story