வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி


வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 27 July 2024 4:54 AM GMT (Updated: 27 July 2024 7:20 AM GMT)

பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் கடந்த 4 நாட்களாக சரிவடைந்த தங்கத்தின் விலை மீண்டும் ஏறத்தொடங்கியுள்ளது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளியோர் தங்கம் வாங்குவதை நினைத்து கூட பார்க்க முடியாது என்ற நிலை இருந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அறிவித்தார். பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து உள்ளது. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ரூ.51,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.89 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


Next Story