நினைவை மறக்கலாமா?


நினைவை மறக்கலாமா?
x
தினத்தந்தி 18 Sep 2022 1:30 AM GMT (Updated: 18 Sep 2022 1:30 AM GMT)

அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா நிலை பற்றிய பொதுவான அறிகுறிகள் மற்றும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ந் தேதி ‘உலக அல்சைமர் தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஞாபக மறதி, நினைவாற்றல் இழப்பு என்று குறிப்பிடப்படும் மனநலம் சார்ந்த நோய் 'அல்சைமர்'. இதை சாதாரண மறதி நோயாக கடந்துவிட முடியாது. இது மூளை செல்களை சிறிது சிறிதாக சிதைக்கும் தன்மை கொண்டதால் படிப்படியாக நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படும்.

அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா நிலை பற்றிய பொதுவான அறிகுறிகள் மற்றும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ந் தேதி 'உலக அல்சைமர் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய நிகழ்வுகளை மறத்தல், குறுகிய கால நினைவு இழப்பு போன்றவை இந்த நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள் ஆகும். அதைத் தொடர்ந்து மனக்குழப்பம், எரிச்சல், அதீத கோபம், பிடிவாதம், மனநிலை மாற்றம், நீண்ட கால நினைவு இழப்பு போன்றவை இரண்டாம் கட்ட அறிகுறிகளாக இருக்கும்.

பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோயின் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. ஆண்களைவிட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஓய்வு காலத்தில் ஒரே இடத்தில் முடங்கி விடாமல், அன்றாட வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். தினசரி செய்திகளை தெரிந்து கொள்வது, குறுக்கெழுத்துப் போட்டிகள், புதிர் கேள்விகள், சிக்கலான கணக்குகளை சரிசெய்வது என தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுக்கும் விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் மறதி நோயின் தாக்குதலை தடுக்க முடியும்.


Next Story