யாரெல்லாம் 'கிரீன் டீ' தவிர்க்க வேண்டும்?


யாரெல்லாம் கிரீன் டீ தவிர்க்க வேண்டும்?
x
தினத்தந்தி 18 Dec 2022 1:30 AM GMT (Updated: 18 Dec 2022 1:30 AM GMT)

கிரீன் டீயில் இருக்கும் காபின், காட்ஸின் மற்றும் டானின் போன்ற மூலக்கூறுகள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.

டல் எடையைக் குறைப்பது உள்ளிட்ட பிறநன்மைகளின் காரணமாக, கிரீன் டீ பருகுவது தற்போது அதிகரித்துள்ளது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதுபோல, ஒரு நாளுக்கு 2 முதல் 3 கப்புக்கு மேல் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு தீங்கு தரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், ஒரு சில உடல் நிலைக்கு கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு, யாரெல்லாம் கிரீன் டீ பருகக்கூடாது என்று இங்கே பார்ப்போம்.

கிரீன் டீயில் இருக்கும் காபின், காட்ஸின் மற்றும் டானின் போன்ற மூலக்கூறுகள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்கக்கூடும். இவை பால் சுரப்பை குறைக்கும் தன்மை கொண்டவை. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.

கிரீன் டீயில் இருக்கும் 'காட்ஸின்', உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும். எனவே ரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கிரீன் டீயைத் தவிர்க்க வேண்டும்.

வயிறு மற்றும் செரிமானக்கோளாறு உள்ள நபர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் 'டானின்' என்ற மூலக்கூறு வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

உள் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு கிரீன் டீ கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

'குளூக்கோமா' எனும் கண் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் கிரீன் டீ பருகக்கூடாது. இது கண்களின் அழுத்தத்தை அதிகரிக்கும்.

இதுமட்டுமில்லாமல் பதற்ற நோய் உள்ளவர்கள், ரத்தப்போக்கு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினை உள்ளவர்கள் கிரீன் டீயைத் தவிர்க்க வேண்டும்.


Next Story