வெற்றி கோப்பையுடன் அர்ஜென்டினா: பரிசுத்தொகையாக ரூ.342 கோடி..!!


உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்சை சாய்த்து 3-வதுமுறையாக கோப்பையை கையில் ஏந்தியது.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின.

கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்னகத்தே ஈர்த்த இந்த இறுதியுத்தம் முதல் வினாடியில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்தது.

தொடக்கத்தில் அர்ஜென்டினா அணியின் கையே ஓங்கியது. அட்டகாசமான தற்காப்பு வளையத்தை உருவாக்கி எதிராளிகளிடம் பந்து அதிகம் செல்லாதவாறு பார்த்துக் கொண்ட அர்ஜென்டினா அணியினர் அடிக்கடி பிரான்சின் கோல் கம்பத்தை நோக்கி படையெடுத்தனர். ஒரு சில ஷாட்டுகள் தடுக்கப்பட்டன. 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஜிரூட் நீண்ட தூரத்தில் இருந்து தலையால் முட்டிய பந்து கம்பத்திற்கு மேலாக பறந்தது.

முதல் பாதியில் 2 கோல்

23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா முதல் கோல் அடித்தது. பந்துடன் கோல் ஏரியாவுக்குள் ஊடுருவிய அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியாவை பிரான்சின் டெம்பெலே கையால் இடித்து தள்ளியதால் அர்ஜென்டினாவுக்கு நடுவர் உடனடியாக பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இந்த வாய்ப்பில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி பதற்றமின்றி லாவகமாக கோல் அடித்தார்.

36-வது நிமிடத்தில் அர்ஜென்டினா, பிரான்சின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி மேலும் ஒரு கோல் போட்டது. அந்த அணியின் மாக் அலிஸ்டர் தட்டிக்கொடுத்த பந்தை ஏஞ்சல் டி மரியா வலைக்குள் செலுத்தினார். கோல் அடித்த பூரிப்பில் அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். 2-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வலுவான முன்னிலையை தொட்டது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான பிரான்ஸ் பயிற்சியாளர் டெசாம்ப்ஸ், தங்கள் அணியின் டெம்பெலே, ஜிரூட் ஆகிய முன்னணி வீரர்களை வெளியேற்றி விட்டு மாற்று வீரர்களை களம் அனுப்பினார். முதல் பாதியில் பிரான்ஸ் வீரர்கள் பக்கம் பந்து செல்வதே அபூர்வமாக தெரிந்தது. அவர்களால் ஒரு ஷாட்டுகளும் அடிக்க முடியவில்லை. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு அணி முதல் பாதியில் ஒரு ஷாட் கூட அடிக்காதது இதுவே முதல் முறையாகும்.

எம்பாப்பே கலக்கல்

ஆனாலும் நம்பிக்கையை இழக்காத பிரான்ஸ் வீரர்கள் பிற்பாதியில் வேகத்தை மேலும் கூட்டினர். இரு அணியினரும் மாறி மாறி கோல் வலையை நோக்கி முற்றுகையிட்ட நிலையில் 80-வது நிமிடத்தில் பிரான்சுக்கு பெனால்டி அதிர்ஷ்டம் கிட்டியது. அந்த வாய்ப்பை பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே கோலாக்கினார். அடுத்த நிமிடத்தில் மெஸ்சியிடம் இருந்து தட்டிப்பறிக்கப்பட்ட பந்து சில கால்களை சுற்றிக் கொண்டு எம்பாப்பே பக்கம் வர அதையும் அவர் பிரமாதமாக கோலுக்குள் உதைத்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது. அதன் பிறகு கடைசி நிமிடத்தில் மெஸ்சி அடித்த சூப்பரான ஷாட்டில் இருந்து பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் தற்காத்துக் கொண்டார்.

வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் 108-வது நிமிடத்தில் மெஸ்சி கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக இருக்கலாம் என்ற நினைப்பை மீண்டும் எம்பாப்பே தகர்த்தார். 118-வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து அர்ஜென்டினா வீரர் மோன்டியல் பந்தை கையால் தடுத்ததால் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் எம்பாப்பே கோல் போட்டார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' கோல் என்ற மகத்தான சாதனையையும் 23 வயதான எம்பாப்பே படைத்தார்.




அர்ஜென்டினா சாம்பியன்

கூடுதல் நேரத்தில் ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமன் ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் அர்ஜென்டினா தங்களுக்கு வழங்கப்பட்ட முதல் 4 வாய்ப்புகளையும் நேர்த்தியாக கோலாக மாற்றியது. அதே சமயம் பிரான்ஸ் தனது 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. கிங்ஸ்லி கோமன் அடித்த ஷாட்டை அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்ட்டினஸ் பாய்ந்து விழுந்து தடுத்தார். மற்றொரு பிரான்ஸ் வீரர் சுவாமெனி பந்தை வெளியே அடித்து ஏமாற்றினார்.

திரில்...பரவசம்...ஆச்சரியம் இப்படி இறுதிப்போட்டிக்குரிய எல்லா அம்சங்களை கொண்டிருந்த இந்த ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது.




மெஸ்சியின் கனவு நனவானது

உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் ஏக்கமும் தணிந்தது. அவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடர் என்பது நினைவு கூரத்தக்கது. இந்த வெற்றியால் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினா தேசமே கொண்டாட்டத்தில் குலுங்கியது.

மகுடம் சூடிய அர்ஜென்டினாவுக்கு ரூ.342 கோடியும், 2-வது இடத்தை பிடித்த பிரான்சுக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.



Next Story