படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் காயம்


படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் காயம்
x

அரியாங்குப்பம் அருகே கடல் சீற்றத்தால் எழுந்த ராட்சச அலையில் சிக்கி படகு கவிழ்ததில் இரு மீனவர்கள் காயம்.

அரியாங்குப்பம்

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் இன்று பகலில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் வழக்கத்துக்கு மாறாக பல அடி உயரம் எழுந்து வந்து கரையில் மோதின.

இந்த நிலையில் நல்லவாடு வடக்கு வீதியை சேர்ந்த சிவசாமி (வயது 45), சரத் (35) ஆகியோர் சிறிய ரக பைபர் படகில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துவிட்டு மதியத்துக்கு மேல் கரை திரும்பினர். அப்போது கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் அடுத்தடுத்து மோதியதால் படகு தத்தளித்து திடீரென்று கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சிவசாமி, சரத் ஆகியோர் கடலில் நீந்தியபடி உதவியை நாடினர். இதை கரையில் இருந்து பார்த்த மீனவர்கள், உடனே கடலுக்குள் சென்று 2 பேரையும் மீட்டனர். அப்போது சிவசாமிக்கு காலில் பலத்த காயமும், சரத்துக்கு லேசான காயமும் ஏற்பட்டு இருந்தது. இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கடலில் படகு மூழ்கியதில் என்ஜின் மற்றும் மீன்பிடி வலைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.


Next Story