பொங்கலோ பொங்கல்..! பாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்


பொங்கலோ பொங்கல்..! பாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்
x

பொங்கல் பொங்கும்போது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள்.

தமிழர் திருநாள் என்று பெருமையோடு அழைக்கப்படும், பொங்கல்' விழா, தைப் பொங்கலுக்கு முன்தினமான போகி பண்டிகையில் இருந்து தொடங்குகிறது. 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப் பண்டிகை, 15-ந் தேதி (திங்கட்கிழமை) தைப்பொங்கல், 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாட்டுப் பொங்கல், 17-ந் தேதி (புதன்கிழமை) காணும் பொங்கல் என்று 4 நாட்கள் பெரு விழாவாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள் கொண்டாடப்படும் முறையை பார்ப்போம்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு. உத்தராயனம் என சொல்லப்படும் தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் வரையான 6 மாத காலம், தேவர்களுக்கு பகல் நேரமாகும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை, தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். 'உத்தரம்' என்றால் 'வடக்கு', 'அயனம்' என்றால் 'வழி'. சூரியன் சிறிது வடக்கு நோக்கி பயணிப்பதை உத்தராயனம் என்றும், தெற்கு நோக்கி சிறிது நகர்வதை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம்.

பொங்கல்

புதுப் பானை வாங்கி, புது அரிசியில் பால் பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கல் பண்டிகையை பற்றி, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பொங்கல் விழாவை, 'இந்திர விழா' என்று நம் முன்னோர்கள் சிறப்பித்துள்ளனர். சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பொங்கல் அன்று கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து வாங்கி, மஞ்சளை சிறுசிறு துண்டாக நறுக்கி, மஞ்சள் கயிற்றில் கோர்த்து, புதுப்பானையில் கட்டி, அந்தப் பானையை அலங்கரிப்பார்கள். பொங்கல் பொங்கும் பொழுது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள். அதேபோல் மேற்கு பக்கம் பொங்கினால் குடும்ப விருத்தி உண்டாகும். தெற்கு பக்கம் பொங்கினால் செலவு அதிகரிக்கும். வடக்கு பக்கம் பொங்கினால் பொருள் வரவு ஏற்படும் என்றும் சொல்வார்கள். பொங்கல் பொங்கும் பொழுது 'பொங்கலோ பொங்கல்..' என்று கூறி மகிழ்வார்கள்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.30, மதியம் 12.40 - 1.40

மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு அடுத்த நாள், மாட்டுப் பொங்கல் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை 'கணுப் பொங்கல்' என்றும் சொல்வார் கள். சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து 'கணுப்பிடி முதல் என்றும் வைப்பார்கள். (முதல் நாள் தைப் பொங்கல் அன்று. பொங்கல் வைத்த பானையில் இருந்து முழுவதையும் எடுத்து விடாமல், சிறிது மீதி வைத்திருப்பார்கள். அதனை கையால் பிடித்து வைப்பார்கள்) அந்த காலத்தில் நதிக்கரை, குளத்தங்கரையில் அல்லது திறந்தவெளியில் செம்மண் கோலம் போட்டு, மஞ்சள் இலை அல்லது வாழை இலையை கிழக்கு நுனியாக வைத்து முதல் நாள் சாதத்தில் சிறிது மஞ்சள், குங்குமம் சேர்த்து தனியாக மஞ்சள் சாதம், சிவப்பு சாதம், வெள்ளை சாதம் என்று ஒவ்வொன்றும் ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் உருண்டை பிடித்து வைப்பார் கள். பின்னர் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி காட்டுவார்கள். பொங்கல் பானையில் இருந்த மஞ்சளை எடுத்து வயதான பெண்களிடம் கொடுத்து திருமாங்கல்யத்திலும், நெற்றியிலும் தேய்த்துக் கொள்வார்கள். இதன் பின் தான் குளித்து புது துணி அணிவார்கள். இவ்வாறு செய்வதால் தன் உடன் பிறந்த சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பிக்கை, காக்கை உருவில் எமதர்மராஜா வந்து இந்த உணவை சாப்பிடுவதாக ஐதீகம். சகோதரர்களும் உடன் பிறந்த சகோதரிகளுக்கு பணமோ அல்லது துணியோ பரிசாக அனுப்பி வைப்பார்கள்.

கோ பூஜை செய்ய ஏற்ற நேரம்: அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, 11 மணி முதல் 12 மணி வரை

மாட்டுப் பொங்கல் வைக்க ஏற்ற நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை

பொதுவாக பசு மாடு வளர்ப்பவர்கள் பசுக்கொட்டிலில் பூஜை செய்வார்கள். வீட்டில் பசு இல்லாதவர்கள் பசுவை வரவழைத்து பூஜிப்பது விசேஷத்தை தரும். பசுவையும், கன்றையும் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து வாசனை

பூக்களால் அர்ச்சிப்பது நன்மை தரும். பசு மாட்டிற்கு சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்பு கொடுக்க வேண்டும். இது சகல தோஷங்களையும் விலக்கும். கோபூஜை முடித்த பிறகு பசுவிற்கு பொங்கலும் கொடுப்பார்கள். அன்று மாலை பசுக்களை சந்-தோஷமாக வைத்திருக்க எண்ணி, அவற்றின் இஷ்டம் போல் ஓட விடுவார்கள். இதற்கு 'ஸ்வச்சந்த சாரம்' என்று பெயர்.

மாட்டுப் பொங்கல் அன்று, கிராமங்களில் ஊர் கூடி ஊருக்கு வெளியே, ஒரு பெரிய மேடான இடத்தில் கள்ளிமரச் சுள்ளிகளைக் கொண்டு மிகப் பெரிய வட்டத்தை உருவாக்குவார்கள். அதில் சிறிது எண்ணெய் சேர்ப்பார்கள். இந்த மேட்டிற்கு 'திட்டாணி மேடை என்று பெயர். இதை பாதுகாக்க ஒருவரை நியமிப்பார்கள். அவரை 'திட்டாணி காவலர்' என்பார்கள். பின் ஊரில் உள்ள மாடுகளை அந்த வட்டத்திற்குள் கொண்டு வந்து கலச தீர்த்தத்தை அதன் மேல் சிறிது தெளித்து, பின் ஆவாரம் பூ, பிரண்டை ஆகியவற்றை, கோரை புல்லால் மாலையாக தயார் செய்து பசு மாடுகளுக்கு அணிவிப்பார்கள். ஒருவர் சேகண்டி அடிப்பார். ஒருவர் தீச்சட்டி எடுப்பார். ஒருவர் சங்கு ஒலிப்பார். எல்லோரும் மகிழ்ச்சியாக விசேஷமாக பாடிக்கொண்டு திட்டாணி மேடையை சுற்றி வருவார்கள். அப்போதும் பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்' என்று அனைவரும் கூறுவார்கள். இதை மாலையில்தான் ஆரம்பித்து செய்வார்கள். இரவு நீண்ட நேரம் ஆகிவிடும். அப்பொழுது திட்டாணி மேடையில் ஊர் கூடி பொதுப்பொங்கல் வைப்பார்கள். ஒரு பெரிய வாழை இலையில் பொதுப் பொங்கலை கொட்டி கற்பூரம் காட்டி பூஜை செய்வார்கள். பொங்கலை பசுமாடுகளுக்கு கொடுப்பார்கள். தாங்களும் பிரசாதமாக எடுத்துக் கொள்வார்கள். பின் அனைவரும் பசு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து, அவரவர் வீட்டு வாசலில் நிற்க வைத்து வைகோலை கொளுத்தி திருஷ்டி கழிப்பார்கள்.

காணும் பொங்கல்

காணும் பொங்கல் அன்று ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் இதை சிறப்பாக கொண்டாடுவார்கள். எனவே இதற்கு 'கன்னிப் பொங்கல்' என்றும் பெயர் உண்டு. பொங்கலுக்கு மூன்றாவது நாள் இது வரும். நதிக்கரையோரம் அனைவரும் கூடி பலவிதமான சித்ரா அன்னங்களை செய்து விசேஷ விழாவாகக் கொண்டாடி மகிழ்வார்கள். சித்ரான்னம் என்பது, தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்றவற்றை குறிப்பிடுவதாகும். அன்றைய தினம் பச்சரிசியில் வெல்லம், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து நைவேத்தியமாக செய்து பூஜையை முடிப்பார்கள். அன்று பலவிதமான பாடல்களும் பாடுவார்கள்.

பொங்கலை ஒட்டி வரக்கூடிய ஒரு வீர விளையாட்டு 'மஞ்சுவிரட்டு' என அழைக்கப்படும் 'ஜல்லிக்கட்டு' ஆகும். அந்த காலத்தில் காளை மாட்டின் கொம்பில் மஞ்சள் பையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வைத்து கட்டுவார்கள். அந்த மாடுகளை வாடிவாசல் வழியாக அனுப்புவார்கள். முதலில் கோவில் மாட்டை அனுப்பி, பின் ஊரில் உள்ள மாடுகளை அனுப்புவார்கள். கோவில் மாட்டை பிடிக்க மாட்டார்கள். காளை மாட்டின் கொம்பில் இருக்கும் மஞ்சள் பையை எடுப்பவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிப்பார்கள். திமிலை பிடித்து குறிப்பிட்ட நேரம் விடாமல் இருந்தால் ஜல்லிக்கட்டில் ஜெயித்ததாகவும் எடுத்துக்கொள்வார்கள். தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகளின் கொம்புகளில் பரிசுப் பொருட்களை கட்டுவதில்லை. திமிலை பிடித்து குறிப்பிட்ட நேரம் விடாமல் இருந்தால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படுகிறது.


Next Story