ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு


ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
x

தனக்கு வெள்ளிப்பதக்கம் வேண்டுமென இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மனு கொடுத்திருந்தார்.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், இனி என்னிடம் போராட சக்தியில்லை எனவும் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது.மேலும் வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரித்தார்.

வழக்கு விசாரணையில் வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் வினேஷ் போகத்தின் மனு மீதான தீர்ப்பு 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 16-ம் தேதி இரவு 9.30 வழங்கப்படும் என விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.


Next Story