புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்


புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்
x

தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேன் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.

தேன் கூட்டைக் கட்டுவதற்குத் தேனீக்கள் ஒரு விதமான பிசினை பயன்படுத்துகின்றன. இதை தேன் பிசின் அல்லது தேன் மெழுகு என்பார்கள். வேலைக்காரத் தேனீக்களின் உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து வரும் ஒரு விதத்திரவம் 'லார்வா' தேனீக்களுக்கு உணவாகும். தேனீயின் கொடுக்கில் உள்ள விஷம் ஆபத்து இல்லாதது. ஆனால், தேனீ கொட்டினால் வீக்கம் ஏற்பட்டு கடுகடுக்கும். அப்படிப்பட்ட தேனீயின் விஷம், தேன் மெழுகு, தேனீயின் உமிழ் நீர் திரவம், தேன் ஆகியவற்றை எலிக்குச் செலுத்தி சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு முன்பு எலிக்கு செயற்கையாக புற்றுநோயை ஏற்படுத்தினர். அதன்பிறகே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தினமும் எலிக்கு தேனும் வழங்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோய் தாக்கம் தடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதன் பிறகு தனித்தனியாக தேன் மெழுகு, உமிழ்நீர், விஷம் மட்டும் சோதனை எலிக்கு கொடுக்கப்பட்டது. இதில் தேன் மெழுகு மூலம் எலியின் புற்றுநோய்க்கட்டியின் வளர்ச்சி கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும் எலியின் ஆயுட்காலமும் அதிகமாகியது.

தேனீயின் விஷம் காரணமாக எலியின் புற்றுநோய் கிருமிகளும் பெருமளவு அழிக்கப்பட்டது. தேனீயின் உமிழ்நீர் காரணமாக எலியின் உடலுக்குள் புற்றுநோய் கிருமிகள் பரவுவது கணிசமாகக் குறைந்திருந்தது.

''தேன் பொருட்கள் புற்றுநோய் கிருமிகள் மடியக் காரணமாகின்றன. அல்லது புற்றுநோய் கிருமிகளுக்குத் தேன் பொருட்கள் விஷமாகின்றன. இதன்மூலம் புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை தடுப்பதற்கு தேன் பொருட்கள் முக்கிய கருவிகளாகப் பயன்படும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இன்னும் இதை உறுதி செய்ய பல கட்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இன்னும் இதுபோன்ற சோதனை நடத்தப்படவில்லை. மனிதர்களிடமும் ஆய்வு நடத்தி, தேன் பொருட்கள் புற்றுநோய் கிருமிகளை அழிப்பது உறுதியானால், உலகில் தேனுக்கு கிராக்கி ஏற்படும் என்பதில் ஐயமில்லை..!


Next Story