ஆடி மாத விரதங்கள்


ஆடி மாத விரதங்கள்
x

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பது நற்பலன்களை அள்ளித் தரும்.

* ஆடி மாதங்களில் இறைவனுக்கு விரதங்கள் இருப்பது விஷேமானது. இம்மாதத்தில் விரதங்கள் மேற்கொள்வதால் பலவித நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். உண்ணாமல் விரதம் இருப்பதும், எந்நேரமும் இறைவனையே சிந்தித்து, மவுன விரதம் இருப்பதால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* இம்மாதத்தில் வேத பாராணயங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆடி மாதத்தில் பிராண வாயு அதிகமாக கிடைப்பதால், ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால் ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது.

* ஆடியில், செவ்வாய்க் கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

* ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடும் பெண்களுக்கு, நினைத்து காரியங்கள் நினைத்தபடியே நடைபெறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்தியபின், துர்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

* ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கவுரி விரதம் கடைப்பிடிப்பது நற்பலன்களை அள்ளித் தரும். வசதி இருப்பவர்கள், தங்கள் வீட்டில் அருகில் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து அம்மனாக பாவித்து உணவு படைக்கலாம்.

* ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வரியம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story