எந்த கடவுளை எப்படி வணங்க வேண்டும்..? தெய்வ வழிபாடுகளும் பலன்களும்..!


Benefits of Worship
x

ஜாதகப்படி சனி பகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

நமது கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக வழிபாட்டு தலங்கள் உள்ளன. உலக ஆசைகளில் கட்டுண்டு அலைபாயும் மனதை அமைதிப்படுத்தி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் மையமாக வழிபாட்டு தலங்கள் திகழ்கின்றன. அன்றாடம் எதிர்கொள்ளும் குடும்ப பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள், உடல்நலப் பிரச்சினைகள் போன்றவற்றால் ஏற்படும் ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு மாமருந்தாக அமைகின்றன.

பல கடவுள்களையும் தெய்வங்களையும் கொண்டுள்ள இந்து மதத்தின் வழிபாட்டு முறைகள், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எந்தெந்த கடவுள்களுக்கு எந்தெந்த முறையில் வழிபாடுகளை செய்ய வேண்டும், அவற்றுக்கான பலன்கள் என்ன? என்பதை முன்னோர்கள் வகுத்து அறிவுறுத்தி உள்ளனர். அவற்றை விரிவாக பார்க்கலாம்.

* எலுமிச்சை, வெல்லம், அவல், மாதுளை, நெல், தேங்காய், பசும்பால் ஆகிய ஏழு வகை பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

* கல்வி கலைகளில் சிறக்க, குழந்தைகள் நன்றாகப்படிக்க, பெருமாள் கோவில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும். சரஸ்வதி தேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

* சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

* இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிஷேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வார்கள்.

* கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீயோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

* நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

* ஆலய திரிசூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

* சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாகும். பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூலாகும்.

* அதேபோல் கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

* ஜாதகப்படி சனி பகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

* வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்ரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

* பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

* மாதா மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும்.

* வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிவப்பு பட்டு துணி சாற்றி, சிவப்பு தாமரையை பாதத்தில் வைத்து 21 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடைபெறும்.

* இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சினை தீரும்.

* செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

* விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

* ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.

* புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைர வருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

* வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய் விளக்கு ஏற்றி வர, விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

* பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

* வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமல் இருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்கு சமம்.

* தொழில் தடை, கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, நல்ல காரியங்கள் நடைபெற பவுர்ணமி தோறும் நடை பெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற் பலன்களை தரும்.

* எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும் என்பது ஐதீகம்.


Next Story