ஆனந்தம் வழங்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன்


Attukal Bhagavathy Temple, Thiruvananthapuram, Kerala
x

கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது.

கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணக் கதை கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப்பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன் கோவில்கள் அனேகம் இருக்கின்றன.

இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லாத சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உலகப்புகழ்பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம்தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல, என்பதை மதுரை பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கிரையாக்கினாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினார் என்றும், அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது என்றும் கூறுகிறார்கள்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் தோன்ற காரணமாக தெரிவிக்கப்படும் மற்றொரு தகவலும் குறிப்பிடப்படுகிறது.

பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய சிறுமி வந்தாள். அவளைப் பார்த்ததும் அந்த அன்னையே குழந்தை வடிவில் வந்திருப்பதாக எண்ணினார் அந்த பக்தர். கருணை மிகுந்த சிரிப்புடன் அம்மனின் பக்தரைப் பார்த்த சிறுமி, 'என்னை ஆற்றின் மறுகரையில் கொண்டு விடமுடியுமா?' என்று கேட்டாள். ஆனால் சிறுமியை உடனே அனுப்ப பக்தரின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க எண்ணினார். அதனை அந்த சிறுமியிடம் கூற எண்ணி திரும்பியபோது, அந்த இடத்தில் சிறுமி இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர் வந்தது அம்பிகை தான் என்பதை எண்ணி மகிழ்ந்தார்.

அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, 'தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் 3 கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து, என்னை குடியேற்றுங்கள்' என்று கூறினாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பக்தர், அங்கு 3 கோடுகள் இருப்பதை கண்டு ஆனந்தம் கொண்டார். அங்கு சிறிய கோவிலை கட்டி அம்மனை வழிபட்டார். நாளடைவில் இந்த கோவிலே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுற்றது என்கிறது கோவில் வரலாறு.

கருவறையில் இரு அம்மன்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீ சக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவபார்வதியின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

கருவறையில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை கரத்தில் தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. கருவறையை சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த அன்னை தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை வாரி வழங்குவதாக ஐதீகம். அம்மை நோய், கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், மன அமைதி இல்லாதவர்கள், எதிரி தொந்தரவு உள்ளவர்கள், வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இந்த ஆலயம் வந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அம்மனும் பொங்கலிடுவதாக...

கேரளம் மட்டுமின்றி, தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபடுகின்றனர். மாசி மாதம் பூர நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நாளன்று இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவின்போது திருவனந்தபுரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கும். ஆண்கள் அனுமதிக்கப்படாத இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். பொங்கல் வைக்கும் பெண்களின் ஊடே, பகவதி அம்மனும் ஒரு பெண் வடிவில் பொங்கல் வைப்பதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

மாலையில் கோவில் பூசாரிகள் ஆங்காங்கே இருக்கும் அனைத்து பொங்கல் பானைகளிலும் தீர்த்தம் தெளிப்பார்கள். அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பூ தூவப்படும். இந்த நிகழ்ச்சியின் போது கோவில் உள்ளேயும் பகவதிக்கு பொங்கல் விடுகிறார்கள். அந்த அடுப்பிற்கு 'பண்டார அடுப்பு' என்று பெயர். கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து வந்தே, 'பண்டார அடுப்பு' பற்ற வைக்கிறார்கள். இந்த அடுப்பில் இருந்து செய்யப்பட்ட பொங்கலில் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகில் சுமார் 3 கிலோ மீட்டர்கள் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

தாலப்பொலி - குத்தியோட்டம்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெறும் அன்று காலையில் சிறுமிகள் அம்மன் சன்னிதியை நோக்கி ஊர்வலமாக வருவார்கள். அந்த நிகழ்ச்சிக்கு 'தாலப்பொலி' என்று பெயர். அனைத்து சிறுமிகளும் புத்தாடை அணிந்து தலையில் மலர் கிரீடம் தாங்கி, கையில் தாம்பாளத்தில் தீபம் ஏற்றிக்கொண்டு, தங்களது பெற்றோர், உறவினர்களுடன் வருவார்கள். இப்படிச் செய்வதால், அந்த சிறுமிகளை நோய்கள் தாக்காது என்றும், அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும் என்றும், எதிர்காலத்தில் சிறப்பான வரன் அமையும் என்பதும் ஐதீகமாக உள்ளது.

இதே போல் சிறுவர்களும் ஒரு நேர்த்திக்கடன் செய்கிறார்கள். அதன் பெயர் குத்தியோட்டம் என்பதாகும். முருகன் கோவில்களில் அலகு குத்தி வருவதை நாம் பார்த்திருப்போம். அது போல் இங்குள்ள சிறுவர்கள் ஒவ்வொருவர் விலாவிலும் கொக்கியை குத்துவார்கள். பின்னர் நீளமான கயிறை, அந்த கொக்கிகள் வழியாக இணைத்து எல்லோரையும் ஒன்றாக இணைப்பார்கள். பகவதி அம்மன் யானை வாகனத்தில் வீதிஉலா வரும் போது, அன்னையின் முன்பாக அலகு குத்திய சிறுவர்கள் அணிவகுத்துச் செல்வார்கள். மகிஷாசுரனுடன், அம்மன் போரிட்டபோது, அம்மனுக்கு பக்கபலமாக சென்ற வீரர்களை நினைவூட்டும் வகையில்தான் இந்த அணிவகுப்பு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.


Next Story