அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்


அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்
x
தினத்தந்தி 22 Jan 2023 1:30 AM GMT (Updated: 22 Jan 2023 1:31 AM GMT)

எலுமிச்சைத் தோல், உடலில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், தோல், ஹார்மோன் சுரப்பிகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கும், சீரான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

லுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்த பின், அதன் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். ஆனால் எலுமிச்சைச் சாற்றில் உள்ளது போலவே, அதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன.

உச்சி முதல் பாதம் வரை, அழகைப் பராமரிப்பதில் எலுமிச்சைத் தோல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நிறைந்துள்ளது.

எலுமிச்சைத் தோலில் உள்ள சத்துக்கள், பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது. உடலில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், தோல், ஹார்மோன் சுரப்பிகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கும், சீரான செயல்பாட்டுக்கும் உதவுகிறது. ரத்தக்குழாய் சுவர்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் இதயம் சீராக இயங்கும்.

இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கின்றன. கரோட்டினாய்டு நிறமிகள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பிளேவனாய்டுகள் கெட்ட கொழுப்பைக் கரைக்கின்றன.


அழகுக் குறிப்புகள்:

1] எலுமிச்சம் பழத்தோலை குளிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து குளித்தால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.

2] அக்குள் மற்றும் தொடையின் இடுக்குகளில், அதிக வியர்வையினால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கருமை படர்ந்திருக்கும். அந்த இடங்களில் தேங்காய் எண்ணெய்யைத் தடவி, சில நிமிடங்கள் கழித்து எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் படிப்படியாகக் கருமை குறையும்.

3] எலுமிச்சைத் தோலில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் முகப்பரு வராமல் தடுக்கிறது. எலுமிச்சைத் தோல், புதினா இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாகும்.

4] முகம், கை, காலில் இருக்கும் இறந்த செல்களை நீக்க எலுமிச்சைப் பொடியை உபயோகிக்கலாம். 3 டீஸ்பூன் எலுமிச்சை தோல் பொடி, 3 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ரோஜா பன்னீர் இவை அனைத்தையும் பசை போல கலக்கவும். இதை முகம், கழுத்து மற்றும் உடலில் பூசி மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து குளிக்கவும். இதனால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்யலாம்.

5] வீட்டில் மெனிக்யூர், பெடிக்யூர் செய்யும்போது எலுமிச்சைப் பொடியை சூடான தண்ணீரில் கலந்து கை மற்றும் கால்களில் பூசவும். 15 நிமிடம் கழித்து சுத்தம் செய்தால் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளிச்சிடும்.

6] எலுமிச்சை தோல் பொடி, மருதாணிப் பொடி ஆகியவற்றை கலந்து 'ஹேர் டை' தயாரித்தால் முடிக்கு இயற்கையான நிறம் கிடைக்கும்.


Next Story