மோடி பிரதமராக பதவியேற்கும் தேதி மாற்றம்


மோடி பிரதமராக பதவியேற்கும் தேதி மாற்றம்
x

மோடி பிரதமராக பதிவியேற்கும் விழா வரும் 8ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின.

இதையடுத்து, நேற்று பிரதமர் மோடி ஜனாதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தை அளித்தார். மேலும் தனது பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். இதனை தொடர்ந்து, அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 17வது மக்களவையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கலைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து, மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. தொடங்கியது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய பிரதமராக மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பிரதமராக மோடி பதவியேற்கும் விழா வரும் 8-ம் தேதி மாலை நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் மோடி வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு 3வது முறை பிரதமராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம், மொரிஷியஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலைவர்களின் வசதியை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழாவை ஜூன் 9ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் பதவியேற்பு விழாவில் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





Next Story