பீகாரில் திடீரென சரிந்த பிரசார மேடை.. காயமின்றி தப்பிய ராகுல் காந்தி: வீடியோ


ராகுல் காந்தியின் பிரசார மேடை சரிந்தது
x

நிலைமையை சமாளித்த ராகுல் காந்தி, தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறி, தொண்டர்களை நோக்கி சைகை காட்டினார்.

பாலிகஞ்ச்:

பீகார் மாநிலம் பாடலிபுத்திரம் மக்களவை தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

பாலிகஞ்ச் பகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள் ஏறியபோது, பாரம் தாங்காமல் மேடையின் மையப்பகுதி சற்று உள்வாங்கி சரிந்தது. இதனால் ராகுல் காந்தி, மிசா பார்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் தடுமாறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனிருந்த சிறப்பு பாதுகாப்பு குழுவினர் மற்றும் பாதுகாவலர்கள் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளிக்க முயன்றனர். எனினும், நிலைமையை சமாளித்த ராகுல் காந்தி, தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறி, தொண்டர்களை நோக்கி சைகை காட்டினார்.

மிசா பார்தி ராகுல் காந்தியின் கைகளை பிடித்தபடி மேடையின் மறுபக்கம் சென்றபோது மீண்டும் மேடை சரிந்தது. எனினும், அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அதேசமயம், தேஜஸ்வி யாதவுக்கு மூட்டு பிரச்சினை இருந்ததால் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் தலைவர்களின் பாதுகாப்பு கருதி மேடையில் சில பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


Next Story